மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கப் போகும் பேரழிவு ஆயுதம் குறித்த விளக்கம் தரும் பசுமைத்தாயகம் அருள் இரத்தினம்.!
arul rathinam say about hijap fake news issue
சுற்றுச்சூழல் ஆர்வலரும், பசுமைதாயகம் பொதுச் செயலாளருமான அருள் ரத்தினம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது,
"கட்டுக்கதைகளை உருவாக்குவது எப்படி? மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கப் போகும் பேரழிவு ஆயுதம் குறித்த விளக்கம்!
1. கர்நாடகத்தின் மாண்டியாவில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய முஸ்கான் கான் எனும் மாணவி பிரபலமானார்.
2. பெங்களூரில் உள்ள நஜ்மா நசீர் எனும் வேறொரு பெண்ணின் படத்தைக் காட்டி, அவர்தான் போராடிய பெண் என்றார்கள். (நஜ்மா நசீர் மாணவியே அல்ல. அவர் ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்)
3. போராடியவரை கொச்சையாக காட்ட, மும்பையை சேர்ந்த தான்யா ஜெனா என்பவரின் உடல் படத்தின் மீது நஜ்மா நசீர் முகத்தை ஒட்டினார்கள்.
4. 'வெளியில் உடல் தெரிய இன்ஸ்டாகிராமில் காட்சியளிக்கும் அதே நஜ்மா நசீர், கல்லூரியில் உடலை மூடும் ஹிஜாப் உரிமைக்காக போராடினார்' எனும் கட்டுக்கதையை உருவாக்கினார்கள்.
- இந்தக் கட்டுக்கதையை பல்லாயிரக் கணக்கானோர் பரப்பவும் செய்கிறார்கள்! ஏராளமானோர் இது உண்மை என்றும் நம்புகிறார்கள்.
கட்டுக்கதை - மிக மோசமான கொடும் குற்றம்!
கட்டுக்கதைகள் மிகமோசமான வன்முறை ஆயுதங்கள் ஆகும். அவை மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதே வரலாறு காட்டும் உண்மை ஆகும்.
உலகின் மிக மோசமான கொடூர ஆயுதம் என்பது அணு குண்டு இல்லை. மாறாக, இத்தகையை எதிர்மறைக் கருத்துகளும் (Negative stereotypes), அவை உருவாக்கும் தப்பெண்ணமும் (prejudice) தான் கொடூரமான அழிவு ஆயுதங்கள் ஆகும்.
சாதாரணமானதாக கருதப்படும் தப்பெண்ணம் தான் - மிகப்பெரிய வெறுப்பு குற்றமாக (Hate Crimes) மாறுகிறது. ஆனால், வெறுப்பு குற்றம் என்பதும் அதன் முடிவு அல்ல. மாறாக, ஒரு இனத்தை முற்றிலுமாக அழித்து முடிக்க வேண்டும் என்கிற இனப்படுகொலை நோக்கம் தான் அதன் இறுதி இலக்கு ஆகும்.
வெறுப்புக் கட்டுக்கதைகள் ஒரு இனத்துக்கோ, மொழிக்கோ, சாதிக்கோ, மதத்துக்கோ மட்டும் எதிரானவை அல்ல. அவை, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரானவை ஆகும்" என்று அருள் ரத்தினம் தெரிவித்துள்ளார்.
English Summary
arul rathinam say about hijap fake news issue