தினகரனின் டெல்லி பயணம் ஏன்..? மொத்த விவகாரங்களையும் போட்டுடைத்த வெற்றிவேல்..!
ammk vetrivel talks about ttv delhi visit
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார். அவர் எப்போது வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது கிளம்பியுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறை துறை அவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாவார் என்று கூறியுள்ளது.
ஆனால், அவர் அதற்கு முன்பாகவே வெளிவர வாய்ப்பு இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்து வருகின்றார். அதிமுகவில் அவரது வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதம் எழுந்துள்ளது. அதே நேரம் அமமுகவினரும் சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கொரோனா காரணமாக வீட்டில் இருந்தபடியே தினகரன் கட்சி பணிகளை பார்த்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி சிறப்பு விமானத்தின் மூலமாக தினகரன் டெல்லிக்கு சென்றார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வெளியே வராமல் இருந்த தினகரன், திடீரென டெல்லிக்கு சென்றதால் சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா விடுதலைக்கான நடவடிக்கையாக டெல்லி சென்றிருக்கலாம் என நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே, டெல்லி சென்றிருந்த டிடிவி தினகரன் அவரது உதவியாளர் ஜெனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் அங்கிருந்து நேற்று முன் தினம் சென்னை வந்தனர். இரவு 9 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை திரும்பிய டிடிவி தினகரன் தான் தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் “தினகரன் எதற்காக டெல்லி சென்றார் என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் சசிகலா விடுதலையானதும் அதிமுக – அமமுக இணைப்பு பணிகளை மேற்கொள்வார் என்றார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து சசிகலா, டிடிவி தினகரன் சேர்ந்தே முடிவெடுப்பார்கள் என தெரிவித்த வெற்றிவேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று உறுதியாக சொல்ல முடியாது” என்றார்.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருப்பதாகவும், எனினும் இதுகுறித்து சசிகலா வெளியான பின்பே தெரிய வரும் என்றும் அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
ammk vetrivel talks about ttv delhi visit