ராஜ்யசபா தேர்தல்! பாமகவிற்கு இடம் உண்டா? வேட்பாளரை அறிவிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்!
ADMK Rajyasabha Candidates
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இந்த தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக சார்பில் கடந்த ஒன்றாம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். அதன்படி திமுக தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று வேட்பு மனுவும் தாக்கல் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மறுபுறமோ மூன்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய அதிமுக இதுவரை மௌனம் காத்து வருகிறது. ஜூலை 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் இன்று வேட்பாளர்களை அறிவிக்க அதிமுக தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை அறிவிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவிற்கு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக அதிமுக முடிவெடுத்திருக்கிறது. அதன்படி பாமக சார்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளர்களாககளமிறங்குவார் என தெரிகிறது. அதிமுக வேட்பாளர்கள் 10 மணிக்கு அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதால் இந்தத் தேர்தலில் போட்டியின்றி 6 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ADMK Rajyasabha Candidates