#சற்றுமுன் || ஓபிஎஸ்., இபிஎஸ்., கூட்டாக வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி.!
ADMK PONKAL 2021 WISH
பொங்கல் பாண்டியை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கூட்டாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வாழ்த்துச் செய்தியில், "உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள்! உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து, அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி! அந்த விவசாயிகளின் வாழ்வு செழித்திட, கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் கூடுதல் மழை பொழிந்து, மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் நடைபெற்று வரும் கழக ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை!
சாதி, மத வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, "பொங்கலோ பொங்கல்'' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை, பொங்கல் பண்டிகை ஆகும்.
உலகில் மக்கள் தொழில்கள் செய்து வந்தாலும், உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இத்தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் வருமானத்தைப் பெருக்கிடவும் பல்வேறு சீரிய திட்டங்களை மாண்புமிகு அம்மா அவர்களின் கழக அரசு செயல்படுத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட, மாண்புமிகு அம்மா அவர்களின் கழக அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2,500 / - ரூபாய் ரொக்கத்தையும் தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில்,
இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்!
இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்! என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறோம்." என்று தெரிவித்துள்ளனர்.