கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட திமுக மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கரூரில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதில், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் C. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன், பி. தங்கமணி, M.R. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் கரூர் M. சின்னசாமியின் பெயரையும் இணைத்து, அதிமுக தலைமை கழகம் திருத்தப்பட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் முழு விவரம் பின்வருமாறு : கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19.12.2022 அன்று நடைபெற இருந்த நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு கழக வேட்பாளர் வெற்றிபெறும் சூழ்நிலை இருந்ததால், கரூர் மாவட்டக் கழக அவைத் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு 9-வது வார்டு உறுப்பினருமான திரு. S. திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. M.R. விஜயபாஸ்கர் அவர்களின் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரிலிருந்து கடத்திச் சென்று, தேர்தல் முடிந்தவுடன் விடுவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 20.12.2022 அன்று மாலை, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் திரு. K.N.R. சிவராஜ் அவர்கள் கரூர்-ஈரோடு வேலுச்சாமிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திமுக-வைச் சேர்ந்த குண்டர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்து அவரை கடத்திச் சென்று, ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டு பின்னர் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். திரு. சிவராஜ் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கழக நிர்வாகிகள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்த திரு. சிவராஜ் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். திரு. சிவராஜ் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திமுக-வினர் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்று இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். இந்த படுபாதக செயல்களை விடியா திமுக அரசின் முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருவதும், காவல் துறையினர் திமுக-வினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் முழு ஒத்துழைப்போடு, திமுக-வினர் இத்தகைய அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு, எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அராஜகத்திற்குப் பெயர்போன திமுக-வினரின் வன்முறை செயல்களைக் கண்டித்தும்; சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணமான விடியா அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.12.2022 - வியாழக் கிழமை மாலை, கரூர் மாவட்டம், கரூர் மாநகரில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்.
இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில்,
திரு. கே.பி. முனுசாமி, M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., அவர்கள் கழகப் பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திரு. பி. தங்கமணி, M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்டக் கழகச்
திரு. கரூர் M. சின்னசாமி அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திரு. M.R. விஜயபாஸ்கர் அவர்கள்
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரூர் மாவட்டம், கரூர் மாநகரில் நடைபெற உள்ள, இந்த கண்டனப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. M.R. விஜயபாஸ்கர் அவர்கள் மேற்கொள்வார்.
திமுக-வினரின் அராஜக வன்முறை செயலைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு அந்த அறிவிப்பில் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Karur Protest Some Change in announce EPS