திடீர்திருப்பம் | கட்சியை விட்டு நீக்கிய முக்கிய புள்ளியை சந்திக்கும் ஓபிஎஸ்!
admk erode ops meet info
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டி வேட்பாளரை களம் இறக்கி உள்ள முன்னாள் முதல்வர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தற்போது தனித்தனியாக இயங்கி வருகின்றனர்.
இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுகவை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது.
இதற்கிடையே அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான முக்கிய உத்தரவை வருகின்ற மூன்றாம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் போட்டி வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை களம் இறக்கி உள்ளார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் தெரிவிக்கையில், "இரட்டை இலை சின்னம் என்னால் முடங்காது. அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வேட்பாளர் படிவத்தில் கையொப்பம் கேட்டால், ஒருங்கிணைப்பாளராக நான் போட தயாராக இருக்கிறேன்.
அதே சமயத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால், தனி சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். எங்களுடைய வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில் பாஜக தரப்பில் வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய வேட்பாளரை நாங்கள் திரும்ப பெறவும் தயாராக இருக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகலாவுடன் தொடர்பு காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஓ பன்னீர்செல்வம் அதிருப்தியை பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.