யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவதா... திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்..!!
Admk Dindigul Srinivasan criticized on OPS in Theni
தேனி மாவட்டத்தை அடுத்த கம்பத்தில் நாளை (ஜன.22) அதிமுக கட்சி நிர்வாகியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் ஆகியோரின் இல்லத் திருமண விழாவிற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி தேனிக்கு வரவிருப்பதால் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக அக்கட்சியின் பொருளாளரும் முன்னாள் அமைச்சரமான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.சி கருப்பண்ணன் ஆகியோர் தேனி மாவட்டத்திற்கு சென்று இருந்தனர்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது "ஈரோடு இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
சட்டம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அதிமுக எங்கள் தரப்பிடமே இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி விட்டன. அதனால் சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு சின்னத்தில் நிற்பதாக ஓபிஎஸ் கூறுகிறார்.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி அடைந்தது போல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மாபெரும் வெற்றி அடையும். ஒரு கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் தேர்தலில் விட்டுக் கொடுப்போம் என ஓபிஎஸ் கூறுவது விந்தையாக உள்ளது.
அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை என்பது பொய்யான தகவல். எங்களுடன் ஓபிஎஸ்ஸை ஒப்பிட்டு பேசுவதை அவமானமாக கருதுகிறோம். யானையுடன் சுண்டலியை ஒப்பிட கூடாது. அது எப்படி சரியாக இருக்கும். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் 20 மாதங்களாக தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்து வருவதை இந்த இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய உள்ளோம்" என செய்தியாளர் சந்திப்பில் பேசி உள்ளார்.
English Summary
Admk Dindigul Srinivasan criticized on OPS in Theni