அதிமுக சட்டமன்ற வேட்பாளர் மீது தாக்குதல்.!
admk candidate car attack in thiruvarur
திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால், அதிமுக பிரமுகர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கடையாச்சேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
இந்நிலையில், இவர் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை கடத்தி விற்கும் லாரிகளை சிறை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிலர் சுரேஷ்குமாரின் கார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதனை கண்டித்து சுரேஷ்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அதிமுக பிரமுகரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் தாக்குதல் செய்த நபர்கள் மீது காவல்துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்ததை அடுத்து, சுரேஷ்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, சுரேஷ்குமார் கார் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
admk candidate car attack in thiruvarur