இது மழைக்காலம் வீட்டை கவனிக்க மறக்காதீர்கள்.. பயனுள்ள டிப்ஸ்.. உங்களுக்காக..!!
rainy season tips 2
வங்கக்கடலின் தெற்குப்பகுதியில் உண்டான நிவர் புயல் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் கரையை கடந்துள்ளது.
சாரல் மழை, கனமழை, மிதமான மழை என பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. பரவலாக மழை பெய்து வருவதால் நம்மையும், நம் வீட்டையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்? என பார்க்கலாம்.
குடியிருக்கும் வீடுகள் கூரை வீடுகளாக இருந்தால் புதுக்கூரை வேய்ந்து கொள்ள வேண்டும்.
ஓட்டு வீடுகளில் வசிப்போர் அதிலுள்ள இடைவெளிகளை நிரப்பி கொள்ள வேண்டும்.
மரக்கதவுகள் மற்றும் மரச்சாமான்கள் ஈரத்தில் ஊறி உப்பிவிடும் என்பதால் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவாமல் மாப் கொண்டு துடைத்து மின்விசிறி போட்டு உடனே தரையை உலர விட வேண்டும்.
மழைக்காலத்தில் மரக்கதவுகள் இறுக்கமாகிவிடும். அந்த சமயத்தில் வெறும் எண்ணெய் மட்டும் விட்டால் போதும். இறுக்கம் தளர்ந்துவிடும்.
பாத்ரூமில் இருக்கும் கதவுகளுக்கு அடியில் தண்ணீர் பட்டு மரம் உரிய ஆரம்பிக்கும். அதனால் பாத்ரூம் கதவின் அடிப்பாகத்தில் அலுமினிய தகடு வைத்து அடிக்கலாம்.
மழைக்காலத்தில் அழுத்தமான நிறத்தில் திரைச்சீலை போடக்கூடாது.
பாத்ரூம் குழாய், சிங்க் குழாய் என எந்த குழாயில் கசிவு இருந்தாலும் குழாயை மாற்றிவிட வேண்டும். மழைக்காலத்தில் இந்த கசிவும் சேர்ந்து கொண்டால் மிக சிரமமாக இருக்கும்.
தரைக்கு அடியில் உள்ள தொட்டியில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் கழிவு நீர் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லா ஜன்னல்களை வெயில் வரும்போது திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் இருக்கும் ஈரப்பதம் குறையும்.
பாய், படுக்கை மற்றும் தலையணைகளை நன்கு வெயில் வரும்போது காயவைத்து எடுத்து வைக்க வேண்டும்.
மழைக்காலத்தில் வெளியே சென்று வருபவர்கள் ஈரம் சொட்டும் குடைகளையும், மழைக்கோட்டுகளையும் வீட்டுக்கு வெளியில் வைப்பது அவசியம்.
வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும்.
மழை மற்றும் பனி நேரத்தில் குழந்தைகளை வெளியே கூட்டி போக வேண்டியதிருந்தால் மாஸ்க், கையுறை, காலுறை, தலைக்கவசம், ஸ்வெட்டர் அணிந்து செல்லுங்கள்.
வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது.
வீட்டிற்குள் இருக்கும்போது காலில், மெல்லிய சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.
ஈரக்காற்று பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள, காதில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள்.