ராஜஸ்தான் விவகாரத்தில் அதிரடி திருப்பம்! வழிமேல் விழி வைத்தவர்களுக்கு விழுந்தது பேரிடி!
sachin pilot meets rahul gandhi
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக மூத்த தலைவர் அசோக் கெலாட் பதவி வகித்தார். துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்து வந்தார்.
இதனிடையே அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி ஆனது நாளடைவில் அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அதிருப்திடைந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் மாநிலத்தினை விட்டு வெளியேறினார்.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களை பாஜகவில் இணைத்து ஆட்சியமைத்தது போல, ராஜஸ்தானில் இவர்களையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்க திட்டமிடுவதாக பாஜக மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே சச்சின் பைலட்க்கு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி அவகாசம் கொடுத்தது. அவருடைய ஆதரவாளர்களும் அவரும் புறக்கணித்த நிலையில் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அக்கட்சி கொறடா தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய திருப்பமாக, சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களின் ஆதரவாளர்களும் விரைவில் ராகுலை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த அரசியல் குழப்பங்கள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
sachin pilot meets rahul gandhi