முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் விவகாரம்! 3 பேரை நியமித்த சோனியா காந்தி!
rajasthan political crisis end with favor of congress
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக மூத்த தலைவர் அசோக் கெலாட் பதவி வகித்தார். துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்து வந்தார்.
இதனிடையே அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி ஆனது நாளடைவில் அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அதிருப்திடைந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் மாநிலத்தினை விட்டு வெளியேறினார்.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களை பாஜகவில் இணைத்து ஆட்சியமைத்தது போல, ராஜஸ்தானில் இவர்களையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்க திட்டமிடுவதாக பாஜக மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே சச்சின் பைலட்க்கு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி அவகாசம் கொடுத்தது. அவருடைய ஆதரவாளர்களும் அவரும் புறக்கணித்த நிலையில் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அக்கட்சி கொறடா தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய திருப்பமாக, சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. பைலட்டின் ஆதரவாளர்களும் விரைவில் ராகுலை சந்திப்பார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட் விரிவாக பேசியதாகவும், மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜஸ்தான் அரசில் பணியாற்ற சச்சின் பைலட் விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 3 பேர் கொண்ட குழுவினை அமைத்துள்ளதாகவும் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் எழுப்பிய பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கான வேலையை இந்த குழு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான் முதலமைச்சரிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியது குறிப்பிடத்தக்கது.
English Summary
rajasthan political crisis end with favor of congress