சீனாவுக்கு மூக்குடைப்பு! இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி?!
pubg again in india
இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற பிரச்சனையில், 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு அடுத்தபடியாக சீன - இந்திய உறவில் விரிசல் பெரிதாக துவங்கியது. இந்த எல்லை பிரச்சனைக்கு முன்னதாகவே சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பல குரல்கள் எழுந்து வந்தது.
இதில், சீனா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள பல செயலிகளின் மூலமாக, இந்திய அதிகாரிகள் மற்றும் மக்களின் செயல்பாடுகளை கவனித்து, தகவலை திருடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில், எல்லையில் ஏற்பட்ட பிரச்னையை வைத்து சீன செயலிகளை முடக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது.
இதன் முதற்கட்டடமாக ஏற்கனவே ஹெலோ, யூசி பிரவுசர், டிக் டாக் போன்ற பல செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பைடு, பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்தால் நடவடிக்கை என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த பப்ஜி செயலி தென் கொரிய நிறுவனத்தைச் சேர்ந்தது. இருப்பினும் டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் எனும் சீன நிறுவனம் தான் இதனை இந்தியாவில் விநியோகிக்கும் உரிமையை பெற்று இருந்தது.\
இந்நிலையில், சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, பப்ஜி நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், "இந்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைதான் நிறுவனத்தின் பிரதான முக்கியத்துவம் என்பதால் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சட்ட வரைமுறைகளுக்குள்பட்டு இந்தியாவில் எங்கள் செயலியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்" என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.