ஆட்டோவுடன் தலைகீழாக கிணற்றில் விழுந்த பேருந்து, கோர விபத்தில் பறிபோன உயிர்கள்..இரங்கல் தெரிவித்த மோடி.!
modi condolence to 26 members died in bus accident
மஹாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இருந்து நேற்று நாசிக் மாவட்டம் கல்வான் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் நாசிக் மாவட்டம் மெஸ்தி பாடாவில் உள்ள மாலேகாவ்-தியோலா சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோவுடன் பயங்கரமாக மோதியது.
ஆட்டோவில் மோதிய வேகத்தில் பேருந்து, ஆட்டோவை இழுத்துகொண்டு சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் மரண ஓலம் எழுப்பினர்.
இந்த நிலையில் சினிமாவில் வரும் காட்சிகளை மிஞ்சும் விதமாக பேருந்தும், ஆட்டோவும் சாலையோரத்தில் இருந்த கிணற்றின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு இரு வாகனங்களும் உள்ளே விழுந்தன. ஆட்டோ பேருந்துஅடியில் சிக்கி கொள்ள அதற்கு மேல் பேருந்து தலைகீழாக விழுந்து கிடந்தது.
பேருந்தின் பின்புறம் தண்ணீரில் மூழ்காமல் வெளியில் தெரிந்தது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய பயணிகள் உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும் அங்கு குவிந்தனர்.
பேருந்து கிணற்றுக்குள் செங்குத்தாக விழுந்து கிடந்ததால் பயணிகளை மீட்பதில், மீட்பு படையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இரவு நேரத்தில் பேருந்து கிணற்றில் இருந்து வெளியே தூக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் பஸ் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 20 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்ததுள்ளது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது , 32 பேர் காயம். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
English Summary
modi condolence to 26 members died in bus accident