CBSE இணைய பக்கத்தில் தொழில்நுட்பப் கோளாறு; உதவிசெய்ய IIT Madras பேராசியர்களின் குழுவுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு..!
Central Government Directs High Level Committee at IIT Madras to Rectify Technical Glitches on CBSE Website
சிபிஎஸ்இ (CBSE) இந்த ஆண்டு வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரும் இணையதளப் பக்கத்தில் தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ-க்கு உதவ சென்னை ஐஐடி (IIT Madras) பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை உடனடியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனபடி, இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி, மறுமதிப்பீடு சேவைகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்சினைகள் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வரப்பட்டன.

குறிப்பாக, மாணவர்கள் லாகின் சிக்கல், பயனர் அணுகல் முறை (User Access Systems) மற்றும் கட்டணம் செலுத்தும் வசதி (Payment Gateways) போன்றவற்றில் பெரிய அளவில் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்பட்டன. இதனால், தங்களின் மறுமதிப்பீடு விண்ணப்பங்கள் சரியாகப் பதிவாகியுள்ளதா என்ற குழப்பத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் கல்வி அமைச்சரின் உத்தரவின்படி, அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, சிபிஎஸ்இ இணையதளத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வர் செயல்பாடுகளை தீவிரமாக ஆராய்ந்து, அதில் உள்ள பலவீனங்களைக் கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பப் பணிப்பாய்வுகளில் தேவையான மேம்பாடுகளைச் செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வண்ணம் கணினி அமைப்பை வலுப்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எதிர்கொண்ட லாகின் பிரச்சனைகள் மற்றும் கட்டண நுழைவாயில் (Payment Gateway) கோளாறுகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, துல்லியமான மற்றும் பாதுகாப்பான வழிமுறை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தற்காலிகச் சீரமைப்பு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சிபிஎஸ்இ ஆன்லைன் சிஸ்டத்தையும் மிகவும் நவீனமானதாகவும், வலுவானதாகவும் மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துப் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளதாவது; அரசின் மிக முக்கிய முன்னுரிமை என்பது மாணவர்களின் நலனே ஆகும். அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், சிபிஎஸ்இ தனது இணையதளச் சேவைகளை முற்றிலும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும் மற்றும் மாணவர்களுக்கு எளிமையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான அனைத்து திருத்த நடவடிக்கைகளையும் முன்னுரிமை அடிப்படையில் உடனே எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Central Government Directs High Level Committee at IIT Madras to Rectify Technical Glitches on CBSE Website