பணியிடை நீக்கம் போதாது! கைது செய்ய வேண்டும்! கர்நாடக அரசுக்கு எதிராக பொங்கிய அண்ணாமலை!
Annamalai condemned in support of pregnant woman death
தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கர்நாடக மாநிலம் தும்மாகூரு டவுன் பாரதியார் நகரில் வாடகை வீட்டில் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் அவருடைய கணவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணி பெண்ணான கஸ்தூரிக்கு உதவியாக மற்றொரு பெண்ணும் அவருடன் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து தும்மாகூரு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தும்மாகூரு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் உஷா என்பவர் கஸ்தூரியின் தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கேட்டுள்ளார். அவரிடம் இரண்டு அட்டைகளும் இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டு கஸ்தூரிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அப்பொழுது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கஸ்தூரி உயிரிழக்க அடுத்த சில நிமிடங்களில் இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி மஞ்சுநாத் விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது கூடியிருந்த பொதுமக்கள் டாக்டரின் கவனக்குறைவால் தான் உயிரிழப்பு சம்பவம் அரங்கேறியதாக குற்றச்சாட்டு முன் வைத்தனர். இதனை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தின் பரிந்துரையின் பெயரில் பணியில் இருந்த டாக்டர் உஷா மற்றும் இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் கர்நாடக மாநில தும்மாகூரு அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.
இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியானதற்கு காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடகா அரசு வழிவகை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Annamalai condemned in support of pregnant woman death