முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக, நிலத்தை அழித்து அமைக்கப்பட்ட ஹெலிபேட்….! துாக்கில் தொங்கிய விவசாயி….!
a farmer hanged before his land
ஆந்திர மாநிலத்தில் தற்போது, சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
குண்டூர் மாவட்டம் கொண்டவீடு கிராமத்தைச் சேர்ந்தவர், கோட்டீஸ்வரராவ். விவசாயி. பெயரில் தான் கோடீஸ்வரன் இருக்கிறதே ஒழிய, இவர் தன்னிடம் உள்ள சொற்ப நிலத்தில், விவசாயம் செய்து தான், பிழைத்து வந்தார்.
சில சமயம், விவசாயம் பொய்த்தாலும், விவசாயத்தை தவிர இவருக்கு வேறு தொழில் தெரியாது. மேலும், விவசாயத்தை தன் உயிர் மூச்சாக எண்ணி தன் நிலங்களைப் போற்றி வந்தார்.
இந்த நிலையில், கொண்டை வீடு கிராமத்தில், வளர்ச்சிப் பணிகளைத் துவங்கி வைப்பதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வருவார் என்று அறிவிக்கப் பட்டது.
அவர் வரவிற்காக, அந்த கிராமத்தில் மும்முரமாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
முதல்வர், அந்த ஊரில், ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக, இடத்தைத் தேடினார்கள். அப்போது அவர்கள் கண்ணில் பட்டது, கோட்டீஸ்வரராவின் சிறிய நிலம் தான்.
நல்ல சம தளத்தில் நிலம் அமைந்து இருந்ததால், அந்த இடத்திலேயே, ஹெலிபேடு அமைக்கலாம், என்று திட்டமிட்டனர்.
இதனை, அந்த விவசாயி கோட்டீஸ்வரராவ் எதிர்த்தார். ஆனால், அந்த ஏழையின் எதிர்ப்பு, அந்த அதிகாரிகளிடம் செல்லுபடி ஆகவில்லை.
அவர்கள் நினைத்த மாதிரியே, அந்த நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு, ஹெலிபேடு அமைத்தார்கள்.
அதற்காக, அந்த விவசாயி வளர்த்து வைத்திருந்த பப்பாளி மரங்களை எல்லாம், ஒரு நொடியில் அழித்தார்கள்.
இதனைக் கண்டு, மனம் வேதனை அடைந்த கோட்டீஸ்வரராவ், அந்த நிலத்தின் எதிரில், மரத்தில் துாக்கி மாட்டிக் கொண்டு தொங்கினார்.
இதைக் கவனித்த அதிகாரிகள், வேகமாக வந்து, அவரை இறக்கி, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
ஆனால், அதற்குள் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
English Summary
a farmer hanged before his land