ஜெயலலிதா பார்முலாவை கையிலெடுக்கும் திமுக, அதிர்ச்சியில் விசிக!
DMK Plan for 2021 elections
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதன் முதற்கட்டமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஐ பேக் என்ற நிறுவனத்தை 380 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றனர்.
பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ பேக் டீம் திமுகவிற்கு தீயாக வேலை செய்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தலைமையிடம் கொடுத்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த தகவலின்படி திமுக கூட்டணியில் திமுக 184 இடங்களில் போட்டியிடும் எனவும், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், அதற்கு அடுத்தபடியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 7 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களையும் ஒதுக்க வேண்டும் என தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகளை திமுகவின் சின்னமான உதயசூரியனில் நிற்க வைக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளை இரட்டை இலை சின்னத்திலே நிற்க வைத்து, 234 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுமாறு செய்தார் ஜெயலலிதா.
தற்போது அதேபோல விசிக, மதிமுக கட்சிகளை தங்களது சின்னத்தில் களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலிலும், விழுப்புரம் தொகுதியில் விசிகவும், ஈரோடு தொகுதியில் மதிமுகவும் திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு வெற்றி பெற்று செல்பவர்கள் திமுகவின் முடிவை தாண்டி சபையில் செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக விசிக வட்டாரம் அதிர்ச்சியுடன் காத்திருக்கிறது. மக்களவை தேர்தல் போல பணிந்து போகுமா? அல்லது சுய மரியாதையுடன் தனி சின்னம் கேட்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
English Summary
DMK Plan for 2021 elections