மன உளைச்சலை அதிகப்படுத்தும் முடிவைக் கைவிட தினகரன் வலியுறுத்தல்!
TTV Dhinakaran Condmens 5th and 8th std public exam
"அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பழனிசாமி அரசு திடீரென அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தின்படி இப்பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறியுள்ளார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு தகவல் வெளியானபோது, “மாநில அரசு விரும்பினால் இந்தப் பொதுத்தேர்வை நடத்தலாம் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறது” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக தற்போது திடீரென இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில், இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது பழனிசாமி அரசு உச்சகட்ட குழப்பத்தில் இருப்பதைக் காட்டுகிறது. அப்படி என்றால் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மேலும் ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டால், மாணவர்களின் இடைநிற்றல்கள் அதிகரிக்கும் என்ற கல்வியாளர்களின் எச்சரிக்கையைப் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லையா? குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதை ஆட்சியாளர்கள் ஏன் உணரவில்லை? மேலும், ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு இந்த அறிவிப்பு மன உளைச்சலை அதிகரிக்கவே செய்யும்.
மத்திய அரசு இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிச் சொல்லி மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விடக்கூடாது. எனவே, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பைப் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்", என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran Condmens 5th and 8th std public exam