கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தவிர்த்து மற்ற அனைத்து வகுப்புகளும் மூடல்.!!
school closed in mumbai
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 8063 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மும்பையில் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்பட்டு விட்டதாக கணிக்கப் பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை குறைந்த நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு மும்பையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மற்றும் 11-ஆம் வகுப்பு பள்ளிகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், பெற்றோர்களின் அனுமதியுடன் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த வேண்டுமெனவும், முடிந்தால் அந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிவாண்டி பகுதியில் தனியார் பள்ளியில் 28 மாணவர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.