மாதம் தோறும் 1000 ரூபாய்., மொத்தம் 4 வருடம்.! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.! விண்ணப்பிப்பது எப்படி?!
central govt scholarship
நாடு முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ -மாணவியர்களுக்கு, மாதம்தோறும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின்படி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவிகள் 'தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம்' தேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வுக்கு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்துக்கான இந்த தேர்வு, வருகிற மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை மத்திய அரசால் கொடுக்கப்படும்.
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் 12-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு கட்டண தொகையாக 50 ரூபாய் சேர்த்து தங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருபத்தி ஏழாம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "2021 -2022 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இது குறித்த மேலும் விவரங்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து கொண்டு வரவேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.