நாளை ரக்ஷா பந்தன்.! தங்கச்சிகளா ரெடியா.?!
raksha bandhan special
ரக்ஷா பந்தன் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகின்றது.
ஆனால், இந்த வருடம் ஆடி மாத பௌர்ணமியிலேயே ரக்ஷா பந்தன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு நாளை ஆகஸ்ட் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஜாதி, மதங்களை தாண்டி இந்த தினம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் சகோதரத்துவத்தை உணர்த்தும் இத்தினம், தற்போது உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ரக்ஷா பந்தனின் சிறப்பு :
ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு" என்றும், 'பாதுகாப்பு பந்தம்" என்றும் பொருள். இப்பண்டிகையை ராக்கி என்றும் அழைப்பார்கள்.
பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் சகோதரர்களின் கையில் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் தீய காரியங்களிலிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
ராக்கி கட்டியவுடன் சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவார்கள். அண்ணன், தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகை திருவிழா ரக்ஷா பந்தன்.
ராக்கி கயிற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாக கருதப்படுகிறது.