“ரசிகர் கைகொடுப்பதற்காக வந்தார்... ஆனால் பிளேடால் கையை கீறினார்!” – அஜித் குமார் பகிர்ந்த அதிர்ச்சிக் சம்பவம்!
The fan came to lend a hand but he scratched his hand with a blade Ajith Kumar shares shocking incident
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித் குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அளித்த ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
எந்தவித புரமோஷன் நிகழ்ச்சிகளிலும், ஆடியோ வெளியீட்டிலும் பங்கேற்காமல் இருப்பவர் என்றாலும், அஜித்தின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம் — அவரது நேர்மை, எளிமை மற்றும் ஒழுக்கத்தை மதிக்கும் தன்மை.
அவரது ரசிகர்கள் தவறு செய்தாலும் அதை நேரில் கண்டிக்கக் கூடிய தைரியம் கொண்டவர் அஜித். பல வருடங்களாக அவர் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் கார் ரேஸிங் குறித்து வெளிநாட்டு சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது 2005ம் ஆண்டில் நடந்த கசப்பான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித் கூறியதாவது:“அந்த நேரத்தில் நான் வெளியில் சென்றிருந்தேன். ரசிகர்கள் என்னைக் கண்டதும் குவிந்துவிட்டார்கள். பலர் என்னை பார்க்க ஓடி வந்து கைகொடுப்பதற்காக கையை நீட்டினார்கள். நானும் கை கொடுத்துவிட்டு காரில் ஏறினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு என் கையிலிருந்து இரத்தம் வடிகிறது என்று கவனித்தேன். பின்னர் தான் கூட்டத்தில் யாரோ ஒருவர் என் கையை பிளேடால் கீறியிருக்கிறார் என்று தெரியவந்தது. அந்த தழும்பு இன்னும் என் கையில் இருக்கிறது,” என கூறியுள்ளார்.
அதோடு, தன்னை அடிக்கடி விபத்துகள் தாக்குவது குறித்து அவர் தெளிவாகச் சொன்னார்:“நான் ஒரு ரேசர் என்பதால் விபத்துகள் நடப்பது வழக்கம் தான். ஆனால் நான் ஒரு நடிகன் என்பதால் அது பொதுவாக பேசப்படுகிறது. இதுவரை விபத்துகளில் சிக்கி 29 முறை அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன். இத்தனை காயங்கள் இருந்தும், ஒருமுறை கூட ‘இந்த ரேசிங்கை விட்டுவிடலாம்’ என்று நினைத்ததில்லை. ஒவ்வொரு விபத்திலிருந்தும் ஒரு பாடம் கற்று முன்னேறுவது தான் வாழ்க்கை,” என உறுதியுடன் கூறியுள்ளார் அஜித்.
அஜித்தின் இந்த திறந்த மன பேட்டி ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
The fan came to lend a hand but he scratched his hand with a blade Ajith Kumar shares shocking incident