முடிவுக்கு வந்தது ஜியோவின் சலுகை... ஜியோவின் அடுத்த அதிரடி அறிவிப்பு.!
jio new offer
இந்திய டெலிகாம் சந்தையில் 2016ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலையில் டேட்டாவை வழங்கி, குறுகிய காலத்தில் பிரபல நிறுவனமாக மாறியுள்ளது.
நாளுக்குநாள் ஜியோ பயனாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் சக போட்டி நிறுவனங்களான வோடாபோன், ஏர்டெல், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட மற்ற சந்தாதாரர்களுடன் பேசுவதற்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஜியோ சிம் மூலம் இலவச அழைப்பு மற்றும் அன்லிமிடெட் டேட்டா சலுகைகளை அனுபவித்த வாடிக்கையாளர்கள், ஜியோவில் ஆயுட்கால சந்தாதாரர்களாக இணைந்தனர். அதன்பிறகு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்து சலுகைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக அவுட்கோயிங் அழைப்புகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், IUC என்னும் இணைப்புக் கட்டணத்தை, தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய்க்கு செலுத்த வேண்டும்.
அதென்ன IUC?
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனம் அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் INterconnect usage charge என்று அழைப்பார்கள். இந்த கட்டணத்தைதான் ஜியோ வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், ஜியோ நிறுவனத்தை பொருத்தவரை, அவுட்கோயிங்குக்கான IUC இணைப்புக் கட்டணத்தை ஜியோவே டிராய்க்கு செலுத்துகிறது. அவுட்கோயிங் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதில்லை.
அவுட்கோயிங் அழைப்புகளுக்கு மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் ஜியோ நிறுவனம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ட்ராய்க்கு செலுத்தியுள்ளது. அதனால் இனி வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேசமயம், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையே எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
இதன்மூலம் மூன்று வருடத்திற்கு பிறகு முதல்முறையாக அழைப்புக்கு கட்டணம் ஜியோ நிறுவனம் வசூலிக்க உள்ளது.