உலகில் உள்ள இலக்கியவாதிகளின் சுற்றுலாத் தலம்!
உலகில் உள்ள இலக்கியவாதிகளின் சுற்றுலாத் தலம்!
இந்த நவீன யுகத்திலும், நாடகம் என்றாலே, பல நுாற்றாண்டுகளைத் தாண்டி நம் நினைவில் நிற்பவர், ஷேக்ஸ்பியர் தான்.
அவரது புத்தகங்களை, வாசிக்காதவர்கள், இலக்கியத்தை அதிகம் நேசிக்காதவர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவு, காதலுடன், அவர் புத்தகங்களை நாம் கையாளலாம்.
மிக சுவராஸ்யமான, அந்த நாடகங்கள் எல்லாம், இன்றும் பேசப் படுகின்றன. இஸ்லாமியர்களுக்கு, மெக்கா எவ்வளவு புனிதமானதோ, அதே போல, கவிதை, கட்டுரை, இலக்கியம், நாடகம் போன்றவற்றை தொடர்ந்து வாசிப்பவர்களும், நேசிப்பவர்களும், தங்கள் வாழ் நாள் கனவாக, சுற்றுலா செல்ல நினைக்கும் இடம், ஷேக்ஸ்பியர் வாழ்ந்த இல்லம் தான்.
லண்டனில், “ஸ்ட்ராட் ஃபோர்ட் அப்பவான் ஏவான்” நகரத்தில் உள்ளது இவர் வாழ்ந்த வீடு. சொல்லப் போனால், தற்போது அந்த நகரத்தின் பிரதான வருமானமும், பொருளாதாரத்திற்கும் ஆதாரமாக இருப்பது, அங்குள்ள ஷேக்ஸ்பியரின் வீடு தான்.
உலகம் எங்கிலும் இருந்து வரும் மக்களுக்காக, இந்த நகரத்தை மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றி உள்ளனர். ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வீட்டின் பழமையை மாற்றாமல், இன்னும் அப்படியே பராமரித்து வருகின்றனர்.
கி.பி. 16-ஆம் நுாற்றாண்டில், அவரது நாடகங்களில் வரும், நீண்ட சாலைகள், புராதன வீடுகள் இன்றும், அந்தப் பகுதியில் நிறைந்து உள்ளன.
அவர் வாழ்ந்த வீடு, அவரது மனைவி ஆன் ஹாத்வே வாழ்ந்த வீடு, அவர் புதைக்கப்பட்ட தேவாலயம், அவர் பயன் படுத்திய பொருட்கள், அவர் தங்கிய அறைகள், நாடகம் எழுதிய மேஜைகள், எழுதப் பயன் படுத்திய மைக் குடுவைகள், என்று ஒரு அருங்காட்சியகமே இங்குள்ளது.
அவர் வீட்டுத் தோட்டத்தில், அவர் எழுதிய நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களின் உருவங்களை, சிலைகளாக ஆங்காங்கே செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
அதற்கிடையே, நமது தாகூரின் சிலையும் இருக்கிறது. அங்குள்ள வழிகாட்டிகள், ஷேக்ஸ்பியர் காலத்து உடைகளை அணிந்து, 16-ஆம் நுாற்றாண்டு கால கட்டத்தில், அங்கு நடைபெற்ற பல சுவராஸ்யமான சம்பவங்களை எடுத்துச் சொல்லி, நம்மை அந்த கால கட்டத்துக்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள்.