சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.
Sundar PIchai Appreciated by US MP
கூகுள் நிறுவனம் சீனாவிற்காக பிரத்யேக தணிக்கை முறைகள் நிறைந்த சேவைகளை அளிக்க இருப்பதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு, அதைப்பற்றி விசாரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தை சேர்ந்த எம்.பிக்கள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது.
இந்த குழு கூகுள் தலைமை செயல் அலுவலரான சுந்தர் பிச்சையை விசாரணைக்கு அழைத்திருந்தது. அதன்படி, சுந்தர் பிச்சை நேற்று இந்த விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரானார்.
அப்பொழுது சுந்தர் பிச்சையைப் பார்த்து நானும் நீங்கள் பிறந்த அதே மாநிலத்தில் தான் பிறந்தேன் என்று குழுவில் இடம் பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் கூறினார்.
இந்த விசாரணையின் போது, சுந்தர் பிச்சை சீனாவுக்காக கூகுள் எந்த பிரத்யேக சலுகையோ, சேவையோ அளிக்கவில்லை. எங்களின் செயல்பாட்டில் நாங்கள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருக்கிறோம். அவரிடம் கேட்கப்பட்ட அனைத்துக்கு கேள்விகளுக்கும் சற்றும் பதட்டப்படாமல் நிதானமாக பதில் அளித்தார்.
விசாரணையின் முடிவில், தான் சுந்தர் பிச்சையுடன் சிறிது தனிப்பட்ட விஷயம் பேச வேண்டும் என அனுமதி வாங்கிய பிரமிளா, நானும் சுந்தரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். இருவரும் இந்தியாவில் ஒரே மாநிலத்தில் பிறந்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்.
மேலும், நீங்கள் கூகுளை வழி நடத்திச் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. குடிபெயர்ந்தவர்கள் இந்த நாட்டுக்கு செய்யும் மதிப்பை இது காட்டுகிறது என்று கூறினார்.
சுந்தர் பிச்சை தனிப்பட்ட முறையில் பிரமீளாவிற்கு நன்றி தெரிவித்தார்.
English Summary
Sundar PIchai Appreciated by US MP