எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத குண்டுவெடிப்பு சம்பவம்!! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!
srilanka bomb blast
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிருத்துவர்கள் நேற்றையதினம் கோலாகலமாக கொண்டாடினார்கள். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவலயத்திலும் சிறப்பு பிராத்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.
அங்கு நடந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 215 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். அங்கு நடந்த குண்டு வெடிப்புகளில் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவரது டுவிட்டரில், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி, மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளியிட்டார். மேலும், கொழும்புவில் பாதிப்புக்கு ஆளான இந்தியர்கள் இருந்தால், உடனே இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவோம் என்று உதவி எண்களையும் பதிவிட்டுள்ளார்.