இந்தியரை சிறையில் இருந்து விடுவிக்க பாக் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Pak HC ordered Indian Techie to release soon
இந்திய வாலிபர் ஒருவர் பாகிஸ்தான் சிறையில் வரும் டிசம்பர் 15 அன்று மூன்று ஆண்டு தண்டனையை நிறைவு செய்கிறார். ஆனால், பாகிஸ்தான் அரசு இதுவரை அவரை விடுதலை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மும்பையைச் சேர்ந்த ஹமீத் நிக்கல் அன்சாரி என்ற 33 வயது இந்தியர், பாகிஸ்தானின் பெஷாவர் மத்தியச் சிறையில் தண்டனைக் கைதியாக உள்ளார்.
இவர் 2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவரிடம் பாகிஸ்தானின் போலி அடையாள அட்டை இருந்ததாக காவல் துறைத் தெரிவித்தது.
விசாரணையின் போது, சமூக வலைத்தளம் ஒன்றில் அறிமுகமான தோழியைச் சந்திப்பதற்காக பாகிஸ்தான் வந்ததாகக் ஹமீம் கூறினார்.
அவர் மீது அங்குள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 2015 ஆம்ஆண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று 15ஆம் தேதி அவரின் தண்டனைக்காலம் முடிவடைகிறது. ஆனால் அவரை விடுதலை செய்ய இதுவரை பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஹமீம் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஹாஜி முகமது அன்வார் வழக்கு பதிவு செய்தார்.
இந்த மனுவில் தண்டனைக் காலம் முடிந்தும் ஹமீமை சொந்த நாட்டிருக்கு அனுப்பி வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இதில் நீதிமன்றம் தலையிட்டு அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் எனக் கூறினார். இது குறித்து உள்துறை மற்றும் சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனக் கூறினார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ரூகுல் அமீன், கலந்தர் அலிகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பாகிஸ்தான் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்டார்னி ஜெனரல், “அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்கள் இன்னும் தயார் ஆகவில்லை” என கூறினார்.
அதனைக் கண்டித்த நீதிபதிகள், “ தண்டனைக்காலம் முடிந்த பின்னர் எப்படி ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியும்? 2 நாளில் அவரது தண்டனை முடிகிறது. ஆனால் அவரை விடுதலை செய்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது” என கருத்து தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம் சார்பில் பதிலளிக்கையில் , “ ஒருவரை விடுதலை செய்வதற்கான சட்ட ஆவணங்கள் தயார் ஆகிற வரையில் ஒரு மாத காலம் சிறையில் வைத்திருக்க முடியும்” என நீதிபதிகளிடம் கூறினர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “அன்சாரியை ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஹமீம் அன்சாரி விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Pak HC ordered Indian Techie to release soon