செல்போன் டவரில் ஏறிப் போராடிய இளைஞர்!. அவரை இறங்க வைக்க காவல்துறை ஆடிய நாடகம்.
செல்போன் டவரில் ஏறிப் போராடிய இளைஞர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர், இதனையடுத்து திருப்பூர் அருகே 200 அடி உயர செல்போன் டவர்மீது ஏறி வாலிபர் ஒருவர் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் இளைஞர் கார்மேகம். இவர், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் டவரில் ஏறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது.
பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் கார்மேகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர் தொடர்ந்து கீழே இறங்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார். மேலும், சம்பவ இடத்துக்குத் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் வந்தால்தான் நான் கீழே இறங்கி வருவேன் என்று அவர் கோரிக்கையும் வைத்தார். இதனையடுத்து காவல்துறையினர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வைப் போன்று தோற்றம் கொண்ட ஒரு நபரை, அப்பகுதிக்கு அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து கார்மேகம் கீழ் நோக்கி இறங்கத் தொடங்கினார். பாதி தூரம் இறங்கி வந்துகொண்டிருக்கும்பொழுது, வந்திருப்பது எம்.எல்.ஏ அல்ல என்பதை அறிந்த அவர், மீண்டும் மேலே ஏற ஆரம்பித்தார். ஆனால், அதற்குள் அங்கு தயாராக இருந்த தீயணைப்புத் துறையினர் மேலேறிச் சென்று கார்மேகத்தை தடுத்து நிறுத்தி கீழே இறக்கி கொண்டுவந்தனர்.
பின்னர் காவல்துறையினர் அவரை முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த டவர் போராட்டத்தால் திருப்பூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
youngster strike on cell phone tower