விழுப்புரத்தை தொடர்ந்து வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிகிறதா?! அமைச்சர் வீரமணி தகவல்!!
vellore may be Dissolve
நேற்று, நடந்த சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தமிழிகத்தில் நீண்ட நாட்களாக கோரிக்கையில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்க கோரிய விஷயத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அதிக ஒன்றியங்களை (22 ஒன்றியங்கள்) கொண்ட மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பரப்பிலும் பெரிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. எனவே, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் வைத்து இருந்தனர்.
இந்நிலையில், அதிகாரபூர்வமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகியதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வேலூரை மூன்றாக பிரிக்கும் கோரிக்கையும் பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது. இன்று, வேலூரிற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை, அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என கூறியுள்ளார்.