கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இரு பெண்கள்!. திடுக்கிடும் காரணம்!.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மனு கொடுக்க வரும் பொதுமக்கள் போலீசாரின் சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த சந்தியா தேவி தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது சந்தியா தேவி, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை குழந்தைகள் மற்றும் தனது மீது ஊற்ற முயன்றார். அதற்குள் போலீசார் தடுத்து நிறுத்தி பாட்டிலை பறித்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் சந்தியா தேவி கூறும்போது, நான் வேலைபார்த்துவந்த உரிமையாளருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் நாங்கள் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தோம். அவர் மூலம் எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் தற்போது அவர் என்னுடன் வாழ மறுத்துவிட்டு, அவரது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்க சென்றால் அவரும், மனைவியும் என்னை அடித்து விரட்டுகின்றனர்.
இதன்காரணமாக விரக்தியடைந்த நான் குழந்தைகளுடன் தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலவன் என்பவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி அவரது மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். நுழைவு வாசல் அருகே வந்தவுடன் ரேவதி திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றார்.
அதனை கண்ட காவல்துறையினர் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி போலீசாரிடம் கூறும் போது, என்னிடம் உறவினர் ஒருவர் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் அவர் என்னை ஏமாற்றி வருகிறார். இதனால்தான் தீக்குளிக்க முயன்றோம் என கூறினார்.
இதனையடுத்து இருபெண்கள் ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயன்றதால் காவல்துறையினரும் திகைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Two women were trying to fire with the children at the Salem Collector office.