குமுறிக் கொண்டிருக்கும் குமரி பெண் போலீசார்..!!
குமுறிக் கொண்டிருக்கும் குமரி பெண் போலீசார்..!!
கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில், பணியாற்றும் பெண் போலீசாரின் நிலைமை மிக மோசமாக இருக்கிறதாம்.
ஏற்கனவே, பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு பணி, எழுத்துப் பரிமாற்றப் பணி உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர்கள் தலையிலேயே கட்டி விடுகிறார்கள்.
அதிலும், புதிதாக வரும் இளம் பெண் காவலர்கள், கம்ப்யூட்டரைக் கையாள்வதில் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதனால், அனைத்துப் புகார்களையும் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் வேலைகளையும் இவர்களைச் செய்யச் சொல்கிறார்களாம்.
இதாவது பரவாயில்லை. காவல் நிலையத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு டீ வாங்கிக் கொண்டு வரச் சொல்லி பெண் காவலர்களை நிர்ப்பந்திக்கிறார்களாம்.
ஆர்டர்லி முறை, உயர் காவல் அதிகாரிகளின் வீடுகளில் மட்டுமல்லாமல், காவல் நிலையத்திலும், அடிமை போல வேலை பார்க்க வேண்டி இருக்கிறது, என்று மனம் பொருமிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆர்டர்லியை விட நாங்கள் கேவலமாக வேலை பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம், என்று கண்ணீருடன் பெண் காவலர்கள் கூறுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது, என்று சக ஊழியர்களே வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
இத்துடன், அவர்களுக்கு, பெண்களுக்குரிய இயற்கையான உடல் பிரச்சினைகளின் போது கூட, வேலையை அதிகமாகக் கொடுத்து பாடாய் படுத்துகிறார்களாம்.
இதனால், ஆர்வத்துடன் வேலைக்குச் சேர்ந்த பெண் காவலர்கள், பணியில் சேர்ந்து சில ஆண்டுகளே ஆன போதிலும், வேலையே வேண்டாம், என்ற மன நிலையில் உள்ள அவர்கள், விரைவில் விருப்ப ஓய்வு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.