தீபாவளி பண்டிகை போன்று, போகி பண்டிகைக்கும் வந்துவிட்டது புதிய கட்டுப்பாடு!
TN Government New rule in Bhogi
தமிழகத்தில் போகி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியவை,
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்தார்கள்.
வீடுகளில் சேகரம் ஆகும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனால் ஏற்பட்ட காற்று மாசுபாடு இயற்கையால் ஜீரணிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று அதிக அளவில் மாசு அடைந்துள்ளது.
போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 9 பன்னாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் சென்னையில் இருந்து பிற விமான நிலையங்களான பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கோயம்புத்தூருக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் 42 விமானங்கள் தாமதமாகவும் 40 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டது.
எனவே இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து காவலர்களுடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணி ஈடுபட உள்ளனர். போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
TN Government New rule in Bhogi