திருநெல்வேலி | தி.மு.க மாமன்ற உறுப்பினர் திடீர் ராஜினாமா! காரணம் என்ன?
Tirunelveli DMK MP resignation
திருநெல்வேலி மாநகராட்சி 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்,
திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பெண் மாமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் அதற்கு பரிந்துரை செய்த பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்
அவர்களுக்கும் முதலில் நன்றி.
எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாளை பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சரோஜினி நீர்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வேணும் வினியோகம் செய்யப்பட்டது.
ஆனால் இப்போது மாநகராட்சி அதிகாரி, உயர் ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து என்னை பழிவாங்கும் நோக்கில் தண்ணீர் விடும் நடைமுறையை மாற்றி அமைத்ததால் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை மாநகராட்சி உயர் அதிகாரி முதல் நான் தெரிவித்தேன். ஆனால் அதை நிவர்த்தி செய்யவில்லை. இந்த விஷயத்தில் ஜாதி பார்த்து முடிவு எடுத்துள்ளார்கள். இது என் மனதை ஆரம்ப முதலே பாதித்தது. தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகத்தை தனியார் நபரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட நாள் முதல் நமது தமிழக முதல்வருக்கும் அவரின் நல்லாட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.
வார்டு தொடர்பாக எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினால் ஜாதி அடிப்படையில் அதனை கண்டு கொள்வதில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடிநீர் வழங்குதல், சுகாதாரத் தூய்மை பணி, மின்விளக்கு பணி, மின்சார துறை, கட்டுமான பணி என அனைத்தும் எங்களது வார்டில் முடங்கியுள்ளது. தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் எனது வாழ்வில் பிரசார முதல் பல்வேறு நிலையில் நான் அவமானம் அடைந்தேன் என்பதை மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்வதோடு இந்நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் எனது 36 ஆவது மாமன்ற உறுப்பினர் பதவியை இன்று முதல் நான் ராஜினாமா செய்கிறேன் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்கள் இடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
Tirunelveli DMK MP resignation