மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் ஊர்க்காவல் படையில் சேர, விண்ணப்பம் வாங்க குவிந்த ஆயிரக் கணக்கான பட்டதாரிகள்…! போலீஸ் தடியடி….!
thousands of graduates crowd to get the application for home guard
தற்போது, தமிழகத்தில், வேலுார் மாவட்ட ஊரக்காவல் படையில் காலியாக உள்ள 51 பணி இடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், வேலுார் தபால் நிலையம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப் படுகிறது.
இந்த ஊர்க்காவல் படையினரின் பணி மாதத்திற்கு 5 நாட்களுக்கு மட்டுமே. ஒரு நாளைக்கு 560 ரூபாய் சம்பளம் வீதம் கணக்கிடப்பட்டு, மாதத்திற்கு, ரூ.2,800 சம்பளமாக வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள். வயது வரம்பு 18 முதல் 50 வரை.
இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், என்று எஸ்.பி. பிரகாஷ்குமார் அறிவித்திருந்தார்.
இலவசமாக வழங்கப்படும் இந்த விண்ணப்பங்களை வாங்குவதற்காக, வாணியம்பாடி, திருப்பத்துார், அரக்கோணம் உட்பட விழுப்புரம் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கான பட்டதாரிகள், அதிகாலை 5 மணி முதலே, வரத் துவங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது.
காலை 11 மணி வரையில், 5000-க்கும் அதிகமானோர் குவிந்திருந்தனர். காலை 11 மணிக்கு, விண்ணப்ப விநியோகம் துவங்கியது. அப்போது, விண்ணப்பத்தைப் பெற கூட்டத்தினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பலர், சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து, விண்ணப்பங்களைப் பெற முயன்றனர்.
இதனால், அந்தப் பகுதியில், ஒரே நெரிசலும், தள்ளு முள்ளுமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர். எண்ணற்ற இளைஞர்களுக்கு கை, கால்களில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதனால், ஊர்க்காவல் படை அலுவலகத்தைப் பூட்டி விட்டு, அருகில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்தில் அனைவரையும் அமர வைத்து, விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப் பட்டன.
English Summary
thousands of graduates crowd to get the application for home guard