தமிழக அரசு புதிய அறிவிப்பு..! தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த வழக்கில் கூடுதல் அதிகாரம்..!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் வரம்பை நீட்டித்தது தமிழக அரசு
கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் வரம்பை நீட்டித்தது தமிழக அரசு .
22.5.18இல் நடந்த துப்பாக்கிச்சூடு, சேதம் குறித்து மட்டுமே விசாரித்து வந்த நிலையில் அதன் பிறகு நடந்த சம்பவங்கள் பற்றியும் இனி விசாரிப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Thoothukudi GUN Fire Shoot case Inquiry