தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாட்கள் 144 தடை உத்தரவு! காரணம் என்ன?
Thoothukudi district 144 prohibitory order 2 days
தூத்துக்குடி, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தூத்துக்குடி, பாஞ்சாலங்குறிச்சியில் இன்று, நாளை வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெறுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் விழா அமைதியான முறையில் நடைபெறும் பொருட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் இன்று மாலை 6 மணி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி முதல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும் மற்ற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு விழாவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள் அபாயகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருள் கொண்டு வரும் வாகனங்கள், சுற்றுலா வேன், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் வேறு ஏதாவது கூட்டங்கள், அன்னதானம், ஊர்வலம் போன்றவை நடைபெறுவதாக இருந்தால் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thoothukudi district 144 prohibitory order 2 days