பக்கா பிளானுடன், அஸ்திவாரத்தையே உடைத்து, வங்கி லாக்கரில் இருந்த 500 பவுன் நகைகள் கொள்ளை…!
theft in a bank
திருச்சி மாவட்டம், மணச்சநல்லுார் அருகே கொள்ளிடம் நம்பர் 1 டோல் கேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல் பட்டு வருகிறது. இந்த வங்கியில் 2000 வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் நகை மற்றும் ரொக்கப் பணம் 400 லாக்கர்களில் பத்திரமாக வைக்கப் பட்டிருந்தது.
நள்ளிரவில், கொள்ளையர்கள், இந்த லாக்கர் இருந்த அறையின் கீழ் இருந்த கருங்கல் சுவரிலே துளையிட்டு உள்ளே நுழைந்து, பின், வெளியே கேஸ் சிலிண்டரை வைத்து, அதன் டியூப்களை உள்ளே செலுத்தி, 5 லாக்கர்களைக் குறி வைத்து, கேஸ் வெல்டிங் வைத்து லாக்கரின் கதவை உடைத்துள்ளனர்.
லாக்கர் எண்- 39, 114, 223, 229, 300 ஆகிய லாக்கர்களை மட்டும் உடைத்து, அதனுள் இருந்த 500 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கொள்ளை அடித்து விட்டுச் செல்லும் போது, சிசிடிவி கேமரா மற்றும் அதன் ஹார்டு டிஸ்குகளையும் கொண்டு சென்று விட்டனர்.
காலையில் வங்கியைத் திறந்த வங்கி ஊழியர்கள், லாக்கர்கள் உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, எஸ்.பி. ஜியா உல் ஹக் ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தக் கொள்ளையில், வங்கி ஊழியர்கள் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து, திருடர்களைத் தேடி வருகின்றனர்.