பள்ளி மாணவிகளை மயக்கமருந்து கொடுத்து கடத்த வந்த அதிர்ச்சி சம்பவம்!. மாணவிகளின் துணிச்சலான செயல்!.
அரிமளம் அரசு பள்ளி வளாகத்தில் சுவர் ஏறி குதித்த வாலிபர் மாணவிகளை கடத்த வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர்.
வகுப்றையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி கொண்டிருந்த நிலையில் சில மாணவிகள் கழிப்பறைக்கு சென்றுவந்துள்ளனர். அப்போது பள்ளி வளாக சுற்றுச்சுவரில் இருந்து ஒரு வாலிபர் ஏறி குதித்து உள்ளே வந்துள்ளார். அவர் கையில் வெள்ளை நிற பொடி, மயக்க மருந்து போன்றவற்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்த இளைஞன், பள்ளி வளாகத்தில் இருந்த 3 மாணவிகளிடம் உங்கள் அப்பா உங்களிடம் பேச வேண்டும் என்று கூறியதாக அந்த மாணவிகளை அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நாங்கள் யாரிடமும் பேச மாட்டோம் எனக்கூறி சத்தம் போட்டு கொண்டு வகுப்பறைக்குள் ஓடி விட்டனர்.
மாணவிகளின் சத்தத்தால் பயந்துபோன அந்த வாலிபர் அங்கிருந்து மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி சென்று விட்டார். தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததால் பெற்றோர்களும் திரண்டனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் இப்பள்ளி மாணவிகள் யாரும் கடத்தப்படவில்லை பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் மாணவிகளை கடத்துவதற்காக அந்த வாலிபர் அங்கு வந்தாரா? அந்த வாலிபர் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அரிமளத்தில் ஆயிரத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் படிக்கும் சிவகமலம் என்னும் தனியார் பள்ளியில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசிரியை பூங்குழலி, மற்றும் ரேணுகாதேவி கூறுகையில், மாணவ மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு செல்லும் வரை பலத்த பாதுகாப்புடனே செல்கின்றனர் என கூறினார்கள்.
English Summary
The shocked incident of kidnapping of government school students