2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Tamilnadu weather report
குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 5 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும். அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழையும் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.