அயல்நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவன், தனது நண்பனைகாப்பற்ற முற்பட்டபோது பரிதாபமாக உயிரிழப்பு!
ரஷ்யாவில் தமிழக மாணவர் ஒருவர் கருங்கடலில் குளிக்க சென்ற இடத்தில் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ராம்குமார் மற்றும் பரமேஸ்வரி தம்பதியினரின் ஒரே மகன் ஜெய்வந்த். இவர் தனது மருத்துவ படிப்பான எம்டி முதலாமாண்டு படிப்பை ரஷ்யாவின் சிம்பரபூல் பகுதியில் உள்ள கிருமியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
3 நாட்கள் விடுமுறை என்பதால், ஜெய்வந்த், தமது நண்பர் இருவர் உட்பட 3 பேர் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். நண்பர் நவீன் கருங்கடலில் ஏற்பட்ட சுழல் அலையில் மாட்டிக்கொண்டார் நவீனை காப்பாற்றும் முயற்சியில் கடலில் குதித்த ஜெய்வந்தும் கடல் அலையில் சிக்கி ஜெய்வந் மற்றும் நவீன் இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது பின்னர் இச்சம்பவத்தை மாலை 6 மணிக்கு தான் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் வசித்துவரும் ஜெய்வந்தின் பெற்றோருக்கு பல்கலைக்கழகம் தகவல் அளித்துள்ளது.
மருத்துவராகி தாய் நாட்டிற்கு வருவான் என எதிர்பார்த்த மகன், மருத்துவ உடற்கூறாய்வு செய்யப்பட்டு வரும் செய்தி கேட்டு அதிர்ச்சியில் அழுது கதறுகிறார் ஜெய்வந்தின் தாய் பரமேஸ்வரி. ஒரே மகனை பறிகொடுத்துள்ள அந்த குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ரஷ்ய தூதரக அதிகாரிகளிடமும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டரிலும் தகவல் அளித்துள்ளதாகவும் ஆனால் தமது மகனின் சடலத்தை தாய் நாடு கொண்டு வர யாரும் உதவ முன் வரவில்லை என்று உயிரிழந்த மாணவன் ஜெய்வந்தின் தந்தை ராம்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu medical college student died in abroad