கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தியது தொடர்பாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க விளக்கம்!
Tamil Nadu State AIDS Control Association Report
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய தொடர்பாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க விளக்கம் அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் அயல்நாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்த போது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தியது தொடர்பாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட இயக்குநர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது,
* எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணியின் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
* பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
* இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
* எதிர்காலத்தில் இதுபோன்று நிகழா வண்ணம் தடுக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ரத்த வங்கிகளில் விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மதுரை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
English Summary
Tamil Nadu State AIDS Control Association Report