எச்.ஐ.வி. ரத்த தானம் வழங்கியவர், மன உளைச்சலால் தற்கொலை முயற்சி….!
suicide attempt by H.I.V. blood donator
சாத்துார் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு, எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப் பட்டதால், தற்போது அந்தப் பெண்ணிற்கு மதுரையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ரத்தத்தை ரத்த வங்கிக்கு தானம் கொடுத்தவர், இந்த செய்தி அறிந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள திருசிலுவையாபுரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள அச்சு நிறுவனம் ஒன்றில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல், இவர் ரத்த தானம் செய்து வந்துள்ளார். இதற்கிடையே, இவர் வெளிநாடு செல்வதற்காக, டிசம்பர் 6-ஆம் தேதி, மேலுார் அரசு மருத்துவமனையில், ரத்த பரிசோதனை மேற் கொண்டார். அப்போது தான், இவரது ரத்தத்தில், எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
இறுதியாக, கடந்த நவம்பர் 30-ஆம் தேதி அன்றும் ரத்த தானம் அளித்துள்ளார். ஆனால், அரசு மருத்துவமனையில் இது பற்றி அவருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
தனது ரத்தத்தில், எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறது, என்பதை அறிந்ததும், இவர் உடனே, அரசு மருத்துவமனைக்குச் சென்று, விபரத்தைக் கூறி, “எனது ரத்தத்தை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது, மருத்துவமனையில் உள்ளவர்கள், “உங்கள் ரத்தம் ஒருவருக்கு கொடுக்கப் பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இதனால், மிகவும் மன வேதனை அடைந்த மணி, எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது உறவினர்கள், அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
suicide attempt by H.I.V. blood donator