திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, கொடூரமாக கொலை செய்த மகன்!
son who killed the father
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள அம்மலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). இவர் விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 60). இவர்களுக்கு ராணி(வயது 40), விஜயா(வயது 35) ஆகிய மகள்களும், முருகப்பன்(வயது 34) என்ற மகனும் உள்ளனர். இதில் ராணி, விஜயா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.
முருகப்பன், மலேசியாவில் 5 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். முருகப்பன் சற்று உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறிவந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்த தனது தந்தை கணேசனிடம், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி, முருகப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கணேசன், முருகப்பனிடம் உன் அவசரத்துக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகப்பன் வீட்டில் இருந்த கோடரியால் தனது தந்தை கணேசனின் பின்பக்க கழுத்தில் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே கணேசன் துடி, துடித்து பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை காவல் சூப்பிரண்டு இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், சிவதாஸ் மற்றும் காவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எடையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
son who killed the father