இரண்டு துறைமுகங்களில் 2-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
இரண்டு துறைமுகங்களில் 2-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
தென்கிழக்கு வங்ககடலில் உருவான காற்றழத்தப் பகுதி வலுவடைந்து, தற்போது தீவிர காற்றழுத்த மண்டலமாக, அதாவது புயலாக மாறியது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் கடற்கரை நோக்கி கடக்க வாய்ப்பு உள்ளது.
புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் உருவானதன் காரணமாக வங்கக் கடலில் வருகிற 17 வரை கடல் சீற்றத்துடன் இருக்கும் எனவும், கடலோர வட மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.
நேற்று நாகை, காரைக்கால், கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக கடல் அலை 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் வரை மேல் எழும்பக் கூடும்என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
இந்நிலையில், நாகை துறைமுகத்திலும், காரைக்கால் துறைமுகத்திலும் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆழக்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை, காரைக்கால் மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர்.