இட வசதி இல்லாததால், கூடுதல் வகுப்புகளைக் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.!
இட வசதி இல்லாததால், கூடுதல் வகுப்புகளைக் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில், அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு வரை நடுநிலைப் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளி, தற்போது, உயர் நிலைப் பள்ளியாக, உயர்த்தப் பட்டுள்ளது.
ஆனால், இங்கு படிக்கும் மாணவர்களுக்குப் போதிய வகுப்புகள் இல்லை. இந்தப் பள்ளியில் 197 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் அதிகம் உள்ள அளவிற்கு, போதிய வகுப்புகள் இல்லை.
இதனால், அருகில் உள்ள சமுதாயக் கூடங்களில், இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு, அங்கு வகுப்புகள் எடுக்கப் படுகின்றன.
அந்த சமுதாய கூடத்தில், அடிக்கடி திருமண விழாக்கள், காதணி விழாக்கள் நடைபெறுகின்றன. அப்போது, அங்கு செல்ல இயலாத மாணவர்கள், பள்ளி வளாகத்தில் வெளியே வெயிலிலும், மழையிலும் மண்ணில் உட்கார்ந்து, பாடம் படிக்கின்றனர்.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், சிரமங்களுக்கும் ஆளாகிறார்கள்.
இந்தப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்புகள் கட்டித் தரக் கோரி, ஏற்கனவே, பள்ளிக் கல்வித் துறைக்கு மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இதனால், கோபம் அடைந்த, இந்தப் பள்ளி மாணவர்கள் நேற்று, வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளிக்கு வெளியே நின்று, கூடுதல் வகுப்புகள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து, நத்தம் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, மற்றும் காவல் துறை அதிகாரிகள் விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கூடுதல் வகுப்புகள் கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
English Summary
School students involved in the fight asking for additional classes because of lack of space