ஈரோட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்..!!
ஈரோட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்..!!
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னிமலை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், சென்னிமலை பேருந்து நிலையம் அருகே நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்நேரம், சந்தேகிக்கும் படியாக அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது.
இதனால், போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததோடு, ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூரில் இருந்து ஊத்துக்குளி பகுதிக்கு லாரியின் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், ஓட்டுனரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். சற்று நேரத்தில் மற்றொரு லாரி ஒன்று வேகமாக வரவே, அந்த லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அந்த லாரியும் அதேபோல் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணல் கடத்திய இந்த லாரியும் பறிமுதல் செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளும் பெருந்துறை வட்டாச்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.