நாளை 22.01.2019ல் விருத்தாசலம் பாலக்கரையில், பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
protest in viruthachalam for viruthachalam district
கடலூர்- திருச்சி சாலையில் உள்ள விருத்தாசலம் கடலூர் மாவட்டத்தில், மிக முக்கிய நகரமாக விளங்குகிறது. மேலும், இது அனைத்து துறைகளிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழகத்தில் பீங்கான் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் பீங்கான் தொழிற்பேட்டை உள்ள ஒரே இடம் விருத்தாசலம் ஆகும். தமிழகத்தில் வேறெங்கும் இத்தைகைய கல்லூரி மற்றும் தொழிற்பேட்டை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி துறை, மின் துறை, முந்திரி மற்றும் வேர்க்கடலைகளுக்கான வேளாண் ஆராய்ச்சி நிலையம், நான்கு வட்டாரத்திற்குட்பட்ட விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்யக்கூடிய பெரிய அளவிலான ஒழுங்குமுறை விற்பனை கூடம், கேரள மற்றும் தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்க கூடிய ரயில்வே சந்திப்பு என ஒரு மாவட்டத்திற்கு உண்டான பல முக்கிய தகுதிகளை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர் மாவட்டத்தின் கடைசி பகுதிகளான மங்கலம்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், மங்களூர், சிறுபாக்கம், தொழுதூர், திட்டக்குடி என விருத்தாச்சலத்தை மையமாக கொண்ட இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் மாவட்ட அலுவலகங்களை நாடி செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்ட மாவட்டம் தனியாக வேண்டும் என பல வருடங்களாக அம்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டமாக மாற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோடியாக விருத்தகீரிஸ்வரர் ஆலய வளாகத்தில் கலந்தாய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அதில், பொது நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களை ஐந்தாக பிரித்து விருத்தாசலத்தை மையமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
எனவே, நாளை 22.01.2019ல் விருத்தாசலம் பாலக்கரையில் விருத்தாசலத்தை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி பொதுமக்கள், பொது நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இது சம்மந்தமாக அரசு அதிகாரிகள், அமைச்சர்களிடம் கோரிக்கையை வலியுறுத்தியும்,
விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட எந்த பகுதிகளையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கூடாது எனவும் மனு கொடுக்க உள்ளதாகவும், இதனை தொடர்ந்து, ஜனவரி 26 அன்று கிராமசபை கூட்டங்களில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
English Summary
protest in viruthachalam for viruthachalam district