அமைச்சர் செல்லுார் ராஜு தொகுதியில், தெர்மாகோலை வைத்து, குழியை மூடிப் போராட்டம்.!
அமைச்சர் செல்லுார் ராஜு தொகுதியில், தெர்மாகோலை வைத்து, குழியை மூடிப் போராட்டம்.!
மதுரையில் உள்ள அமைச்சர் செல்லுார் ராஜுவின் தொகுதியில், குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக, குழிகள் தோண்டப் பட்டன.
மதுரை மாநகராட்சி 21-வது வார்டு, பெத்தானியபுரம் அண்ணா மெயின் வீதியில் அடிக்கடி குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து விடுகிறது. இதனைச் சீரமைக்க, இந்தத் தெருவில் உள்ள எட்டு இடங்களில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக, குழிகள் தோண்டப் பட்டன.
பணிகள் நிறைவு பெற்று விட்டாலும், அந்தக் குழிகள் எல்லாம் இன்றும் மூடப்படாமல் உள்ளன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டன.
எனவே, இந்தக் குழிகளை மூடச் சொல்லி, பெத்தானியபுரம் பகுதி மக்கள், மதுரை மாநகராட்சியிடம் புகார் வழங்கினர். ஆனால், இது வரை, மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழிகள் எல்லாம் அப்படியே இருந்தன.
அதனால், நேற்று பெத்தானியபுரம் மக்கள், வித்தியாசமாக ஒரு போராட்டத்தை நடத்தினர். மூடப்படாத அந்தக் குழிகளை, “தெர்மாக்கோல்” கொண்டு மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், இந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக. நிர்வாகிகள், கீரிப்பட்டி பாண்டி, ஆசை, நாகராஜ், நாகஜோதிசிவா, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மற்றும் இந்தப் பகுதி, சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களும், இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
English Summary
protest in sellur raju assembly area