பொன்பரப்பி, பொன்னமராவதி பிரச்னை!! தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!
ponparapi and ponamaravathi issues
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் தங்கள் சமூகம் குறித்து மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் இழிவாக பேசியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீசார் மீதும், அவர்களின் வாகனம் மீதும், தனியார் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அப்பகுதியையே வன்முறை களமாக்கினார். உள்ளூர் காவல் நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்கள் தாக்கியதில் காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும் கடை வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்களில் சிலர் அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து இழிவாக பேசியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, பனையப்பட்டி, நல்லூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு நடந்த சம்பவத்தை அடுத்து, பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அந்த கலவரத்தினால் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையிலும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு சமூகத்தைப் பற்றி தவறாகப் பேசும் வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பி, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையிலும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலையிட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது.
மேலும் அங்கு நடைபெற்ற இரு சம்பவங்களும் வேதனைக்குரிய ஒன்றாகும். இவ்விரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
English Summary
ponparapi and ponamaravathi issues