மெரினாவில், குவிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீஸ்! பலத்த பாதுகாப்பில் மெரினா!
Pongal celebration in merina beach
தை முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும், 17-ந் தேதி காணும் பொங்கலும், தமிழகத்தில் களை கட்டும். அன்றைய தினம் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பார்கள். அன்று காலையிலேயே இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் உணவு வகைகளை சமைத்து எடுத்துச்சென்று அங்கேயே சாப்பிட்டு, மாலையில்தான் வீடு திரும்புவது வழங்கமாக கொண்டுள்ளனர்.
காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்படும்.
மெரினாவில் கடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையையொட்டியுள்ள பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலியும் அமைத்துள்ளனர். கடற்கரை பகுதி முழுவதையும் கண்காணிப்பதற்காக 6 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் கோபுரங்களை அமைத்து வருகின்றனர்.
அங்கிருந்தபடி பைனாகுலர் மூலமாக காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிப்பது எளிதாகிறது. கடலில் இறங்கி குளிப்பவர்களை கட்டுப்படுத்த குதிரை படை வீரர்களும் இப்போதே ரோந்து சுற்றி வருகிறார்கள்.
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு எளிய வழியாக, குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் காவல் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையமும் அமைக்கப்படுகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாமல்லபுரத்திலும் பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால் அங்கும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Pongal celebration in merina beach